ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டது ஐ.நா.. வெட்கமில்லாமல் பேசும் பான் கீ-மூன்!
கொழும்பு: இலங்கை இறுதிகட்ட போரின் போது தமிழர்களை காக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, தற்போது ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டோம் என அதன் பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியிருப்பது உலக தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ஐ.நா., சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட்டிருந்தால், இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, அதிக அளவிலான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவம் குறைக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களை, சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டு கால போரின் போது ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்வதில் இலங்கை அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அவற்றைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதல்களுக்கு பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள் வீசப்பட்டன.
ஒருகுறிப்பிட்ட இடத்தில் முள்வேளியில் அடைக்கப்பட்டு தமிழர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். கடுமையான ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது ஐ.நா., பொதுச்செயலாளராக இருந்த பான் கீ மூன் தமிழர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஆனால் தற்போது ஈழத் தமிழர்களை காக்க தவறிவிட்டோம் என ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ-மூன் கூறியிருப்பது உலக தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற பான் கி-மூன் தற்போது 2வது முறையாக அங்கு சென்றுள்ளது நினைவு கூரத்தக்கது.