ஐநா மனித உரிமைகள் ஆணையர் நாளை மறுநாள் இலங்கை பயணம்... கிலியில் ராஜபக்சே அண்ட் கோ!!
கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் உசேன் நாளை மறுநாள் கொழும்பு பயணம் மேற்கொள்ள உள்ளது மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சர்வதேச அளவில் இலங்கை விவகாரத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் தற்போது மென்மையான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பான உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையையும் மைத்ரிபால சிறிசேன அரசு மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் உசேன் நாளை மறுநாள் இலங்கை பயணம் மேற்கொண்டு 4 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளார்.
அப்போது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சென்று தமிழர்களை சந்திப்பதுடன் அம்மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் ஜெய்த் ராத் அல் உசேன் சந்திக்க உள்ளார்.
அவரது இந்த பயணத்துக்குப் பின்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப் போகும் அறிக்கை இலங்கைக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் போர்க்குற்றவாளிகளான மகிந்த ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ராஜபக்சே ஆட்சிக் காலத்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கையை சர்வதேச கூண்டிலேற்றத்தான் ஜெய்த் ராத் அல் உசேன் வருகை தருகிறார் என அலறிப் போய் கூறியுள்ளார்.