காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க முதல்முறையாக இலங்கை செல்கிறது ஐ.நா குழு
கொழும்பு: இலங்கையில் போரின்போது, காணாமல் போனது தொடர்பாக, விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வருகை தர உள்ளது.
பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் வரும் 9ம் தேதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசின் அழைப்பிற்கு ஏற்ப இந்தப் பிரதிநிதிகள் இலங்கை செல்ல உள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்க ஆட்சிக் காலங்களில் இந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகைதர விரும்பியபோதெல்லாம், அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களை தடுக்க தற்போதைய அரசு எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை பிரதிநிதிகள் ஆராய உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு இந்தப் பிரதிநிதிகள் செல்ல உள்ளனர். அரசு அதிகாரிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.