இலங்கையில் ஐநா மனித உரிமைகள் ஆணையர்... போர்க்குற்றங்களுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
கொழும்பு: போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் உசேன் 4 நாட்கள் பயணமாக இலங்கை வருகை தந்துள்ளார்.
சர்வதேச அளவில் இலங்கை விவகாரத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் தற்போது மென்மையான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பான உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையையும் மைத்ரிபால சிறிசேன அரசு மேற்கொள்ளவில்லை.
வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஜெய்த் ராத் அல் உசேன் இலங்கை வருகை தந்துள்ளார்.
4 நாட்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்ளும் அவர் தமிழர் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்துகிறார். காணாமல் போனோரின் உறவினர்களையும் சந்தித்து பேசுகிறார்.
அவரது இந்த பயணத்துக்குப் பின்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப் போகும் அறிக்கை இலங்கைக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.