தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களையும் சந்தித்தார் ஜான் கெர்ரி! ராணுவத்தை வெளியேற்ற வலியுறுத்தல்!
கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது வடகிழக்கில் இருந்து ராணுவத்தை விலக்க வேண்டும் என்று கெர்ரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தினர்,
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார். கடந்த 33 ஆண்டுகளில் முதன் முதலாக இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான இவர், இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நேற்று ஜான் கெர்ரி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்த வேண்டும்; வடகிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயத் தீர்வு வேண்டும்; ராணுவத்தை விலக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கெர்ரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் இலங்கை அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கெர்ரி கேட்டுக் கொண்டார்.