இலங்கையில் யு.எஸ். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி! அதிபர், பிரதமருடன் ஆலோசனை!!
கொழும்பு: இலங்கையில் வருகை தந்துள்ள அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி இன்று அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புகளின் போது மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்று இலங்கை தரப்பில் கோரிக்க்கை முன்வைக்கப்பட்டது.
அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு இன்று காலை கொழும்பு வந்தடைந்தது. கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்கா குழுவினரை வரவேற்றார்.
இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக ஜான் கெர்ரி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு 33 ஆண்டுகளுக்கு முன்னர் 1982ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வந்திருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வருகை தந்துள்ளார்.
2 நாள் பயணமாக வந்த கெர்ரி, அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார். அப்போது அதிபர் தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பிரதமர் ரணில், வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் கெர்ரி சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும், இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.