ஆட்சி போனபின் முதல் வெளிநாட்டு பயணம்.. ராஜபக்சேயின் சீன பயணத்தை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே, சீனாவிற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், அவரை அமெரிக்க அரசு உன்னிப்பாக கண்காணிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஊடகங்களை மேற்கோள்காட்டி சிங்களப் பத்திரிகை ஒன்று இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
சீன அரசின் அழைப்பின் பேரில் மஹிந்த ராஜபக்சே இந்த மாதத்தின் இரண்டாவது வார பகுதியில் சீன தலைநகர் பீஜிங்கிற்கு செல்ல உள்ளார். அவரது பயணத்தின்போது சீன நாட்டு வர்த்தகர்கள், ராஜதந்திரிகள் எனப் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவின் சுற்றுப்பயணத்தின்போது அவரது பாதுகாப்பு விஷயத்தில் சீன அரசு அதிக அக்கறை எடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மற்றொரு பக்கம் ராஜபக்சேவின் சீன பயணத்தை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி காலத்தின்போது ராஜபக்சே சீனாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட நிலையில், ஆட்சியை இழந்த பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக சீனாவை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதால், சீனா-ராஜபக்சே நடுவேயான பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்துகிறதாம்.
இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில், இந்தியா, சீனா தவிர்த்து தற்போது அமெரிக்காவும் ஆர்வம் காட்டுகிறது. சிறிசேனா அரசும், அமெரிக்கா பக்கம் சாய தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் தூண்டுதலின்பேரில் ராஜபக்சே ஏதேனும் காய் நகர்த்தலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை, தனது செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.