சிங்கள திரையுலகின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்
சர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஏப்ரல் 29 ஆம் தேதி தனது 99ஆவது வயதில் காலமானார்.
1919இல் பிறந்த இவர் 1949 முதல் சிங்கள சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார்.
முழுநீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறுந்திரைப்படங்கள் என இவர் உருவாக்கிய 28க்கும் அதிகமான படங்களில் பல, சர்வதேச புகழ் பெற்றவையாகும்.
ரெக்காவ, கம்பெரலிய,நிதானய, கொலு ஹடவத்த போன்ற இவரது படங்கள் இலங்கையின் கிராமிய வாழ்வை உலக அரங்குக்கு கொண்டு சென்றவையாக பாராட்டப்படுபவையாகும்.
இந்திய திரைப்படங்களின் பிரதிகளாக இருந்த இலங்கை சினிமாவுக்கு நவீன யாதார்த்தத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு ஒரு செல்நெறி வகுத்தவர் இவர் என்றும் சிங்கள சினிமாவுக்கு சர்வதேச மட்டத்தில் ஒரு அடையாளத்தை தந்தவர் இவர் என்றும் இவரை வர்ணிக்கிறார் சினிமா விமர்சகரும், இயக்குனருமான ஞானதாஸ் காசிநாதர்.
லண்டனில் சினிமா கல்வியை முடித்து இலங்கை திரும்பிய இவர், 2006ஆம் ஆண்டு வரை சினிமா துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளார்.
கிராமிய வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு 1956இல் இவர் இயக்கிய ரெக்காவ என்ற திரைப்படந்தான், முதன் முதலில் அவுட்டோரில் படமாக்கப்பட்ட சிங்கள திரைப்படமாகும்.
இலங்கை சினிமாத்துறையில் இது ஒரு மறுமலச்சியாக பார்க்கப்படுகின்றது. சர்வதேச மட்டத்தில் இது பிரபலமாக அங்கீகரிக்கப்பட்டாலும், வணிக ரீதியில் இது தோல்விப்படமாகும்.
இலங்கையின் பிரபல புனைகதை ஆசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கதையை அடிப்படையாகக் கொண்டு இவர் தயாரித்த கம்பெரலியவும் சிறந்த படமாகப் பேசப்பட்டதாகும். 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இவரது மனைவியான சுமித்ராவும் ஒரு திரைப்பட இயக்குனரே.
பிற செய்திகள்:
- வட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப்பந்தம்: அமெரிக்க வெளியுறவுச் செயலர்
- பிரபல கால்பந்து தொடரில் பங்கேற்கும் "முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்"
- உலகப் பார்வை: பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்
- ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா?