தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட முடியாது: விக்னேஸ்வரனுக்கு இலங்கை சுப்ரீம் கோர்ட் குட்டு
கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் தொடர்ந்த வழக்கில் மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தோல்வி அடைந்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வடக்கு மகாண முதல்வராக விக்னேஸ்வரன் கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார்.
தனது அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மாகாண ஆளுநரும், தலைமைச் செயலாளரும் இடையூறாக இருப்பதாக விக்னேஸ்வரன் நினைத்தார். இதையடுத்து அவர் சுற்றறிக்கை ஒன்றை மாகாண அரசின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மாகாண ஆளுநரின் முடிவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்காமல், அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கையை எதிர்த்து தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.
அந்த பெஞ்ச் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
அரசின் தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரமும் தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மட்டுமே உண்டு. மாகாண தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் முதல்வருக்கு கிடையாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.