இலங்கை வடமாகாண முதல்வராக விக்னேஸ்வரன் நீடிப்பார்
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் பதவியில் விக்னேஸ்வரன் தொடர்ந்து நீடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முறைகேடு புகார்களுக்கு உள்ளான வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்று முதல்வர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டார். இதனால் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் போவதாக ஆளுநரிடம் இதை நீதிக்கான வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு மனு கொடுத்தது.
இந்த விவகாரத்தால் இலங்கை தமிழரசு கட்சியில் சலசலப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது. மேலும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அத்துடன் தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் மதத் தலைவர்களும் விக்னேஸ்வரனுடன் ஆலோசனை நடத்தினார்.
இலங்கை வடமாகாண முதல்வராக விக்னேஸ்வரன் நீடிப்பார் https://t.co/yUqMseFovj pic.twitter.com/ZyGFTQVKZX
— Oneindia Tamil (@thatsTamil) June 20, 2017
இந்நிலையில் அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தப் போவதில்லை என விக்னேஸ்வரன், சம்பந்தனிடம் கூறியிருந்தார். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான மனு திரும்பப் பெறப்படும் என இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இதனிடையே நீதிக்கான வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான மனு வாபஸ் பெறப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் நீடிப்பார் என்றே தெரிகிறது.