இலங்கை அதிபர் தேர்தல்- வாக்குப் பதிவு முடிவடைந்தது- சுமார் 80% வாக்குகள் பதிவு
Recommended Video
கொழும்பு: இலங்கையின் 8-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் 75% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இத்தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இலங்கை வரலாற்றில் மிக அதிக அளவிலான வேட்பாளர்கள், அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் மிக நீளமான வாக்குச் சீட்டு இம்முறை பயன்படுத்தப்பட்டது.
இன்றைய தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்தன. கருணா. வரதராஜ பெருமாள் உள்ளிட்ட சிலர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
12,845 வாக்குச் சாவடிகளில் சுமார் 1.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 9.50 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.
இன்று காலை முதலே அனைத்து பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 5 மணிவரை விறுவிறுவென வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு நடுவேயும் மக்கள் வாக்களித்தனர்.
மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 80% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.