இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னணி என்ன? கண்ணில் விரல் விட்டு ஆட்டிய தமிழர் தேசிய கூட்டமைப்பு
Recommended Video
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நேற்று இரவு திடீரென கலைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
அதிபரின் இந்த அறிவிப்பு பின்னணியில் முக்கியமான காரணமாக இருப்பது அவரால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதுதான்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 113 எம்பிக்கள் பலம் தேவை.
[கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஜனவரி 5ம் தேதி தேர்தல்!]
தமிழர் தேசிய கூட்டமைப்பு
ஆனால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தாலும்கூட ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை காண்பிக்கும் அளவுக்கு எம்பிக்கள் பலம் கிடைக்கவில்லை. அதிகமாக நம்பிக்கொண்டிருந்தது தமிழர் தேசியக்கூட்டமைப்பு கட்சிகளைத்தான். ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமாக நியமிக்கப்பட்ட ராஜபக்சே அரசுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று முகத்தில் அறைந்தது போல தெரிவித்துவிட்டது தமிழர் தேசிய கூட்டமைப்பு. தமிழர் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் ராஜபக்சேவால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லை. ஒரே ஒரு, எம்பி மட்டும் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தார். அதற்கு பிரதிபலனாக அமைச்சர் பதவியை பெற்றார்.
பெரும்பான்மை இல்லை
நேற்று மதியம் வரையிலான நிலவரப்படி ராஜபக்சே அணிக்கு 104 அல்லது 105 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. அதே நேரம், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் ஆட்சி கவிழும். ரணில் விக்கிரமசிங்கேதான் பிரதமராக தொடரவேண்டிய வரும் என்ற நிலையில் வேறுவழியில்லாமல் அதிபர் மைத்திரிபால சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.
மக்கள் ஆட்சி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை நடத்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியை விட்டு விரட்ட வேண்டும் என்ற சிறிசேனா மற்றும் ராஜபசே ஆகியோரின் பதவி வெறிக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நடவடிக்கை சிறிசேனா மட்டும் ராஜபக்சே ஆகியோர் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கும் திட்டத்தை முறியடித்துள்ளது.
தேர்தல் தள்ளிப்போகும்
வரும் ஜனவரி 5ஆம் தேதி பொதுத்தேர்தல் என்று அறிவித்திருந்தாலும் கூட அவ்வளவு விரைவில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை. தேர்தலை தள்ளிப்போட்டுக்கொண்டே செல்வதுதான் அதிபர் திட்டமாக இருக்கும் என்று அங்குள்ள அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.