23 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ். தேவி ரயில் கிளிநொச்சி போனது!
கிளிநொச்சி: 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று யாழ் தேவி ரயில் கிளிநொச்சி சென்றடைந்தது.
இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இந்தியாவின் உதவியுடன் வடக்கு பகுதியில் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து இன்று கிளிநொச்சிக்கான யாழ்தேவி ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
ஓமந்தையில் இன்று காலை 9.30 மணிக்கு யாழ்தேவி ரயில் புறப்பட்டது. முதல் பயணியாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பயணம் ஏறினார். இலங்கை அமைச்சர்களும், இலங்கைக்கான இந்தியத் தூதர் வை.கே.சின்ஹாவும் ராஜபக்சேவுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
இந்த ரயில் கிளிநொச்சியை காலை 10.15 மணிக்கு வந்தடைந்தது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர், கிளிநொச்சிக்கான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடக்கில் சிறிலங்கா அதிபர் மேற்கொண்டுள்ள மாகாணசபைத் தேர்தல் பரப்புரையின் ஒரு கட்டமாகவே, இந்தத் தொடருந்துச் சேவையை அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.