21ஆம் தேதி ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம்… கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 21ஆம் தேதி, வியாழக்கிழமை ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண விழா துவங்கியதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா - அதிகார நந்தியை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன்வாழும் ஊர் என்று பெயர் பெற்றது. கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்கு அடுத்தபடியாகிய ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.
கொடியேற்றத்துடன் துவங்கியது
இந்நிலையில் இந்த வருடத்திற்தான திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீ தன்விபுரம் எனப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் ஸ்ரீ வடபத்திரசாயி என்ற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்துடன் உள்ளார். இங்குள்ள பெருமாளின் அம்சமாகிய ஸ்ரீ வடபத்ரசாயி எனப்படும் ஸ்ரீ ரெங்கமன்னாரை ஸ்ரீலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக அவதரித்து திருப்பாவை எனும் பாமாலை சூட்டி பின் பூக்களான பூமாலை சூட்டி திருமணம் செய்து கொண்டார்.
12 நாள் திருவிழா
இந்த திருக்கல்யாண உற்ஸவமானது புதன்கிழமையான இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது. இன்று முதல் 12 நாள் திருவிழாவாக நடக்கும் இந்த விழாவின் முக்கிய நிகழ்சியான ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கல்யாண நிகழ்ச்சி 9ம் திருநாளான பங்குனி உத்திரம் தினமான 21.03.19 வியாழக்கிழமை அன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெற்று அதன் பின் இரவு 7 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் நடைபெறுகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
இதற்காக ஆடிப்பூர மண்டபம் தயாராகி வருகிறது. இந்நிகழச்சிக்கு மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, நாகர்கோவில் மற்றும் ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
திருவீதி உலா
இது குறித்து அர்ச்சகர் கூறுகையில்; பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் பிறந்து ஸ்ரீ ரெங்கநாதரான ஸ்ரீ ரெங்கமன்னாரை திருமணம் செய்யும் நிகழ்ச்சிக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியதாகவும் இன்று முதல் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அலங்காரங்களில் யானை வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
கல்யாணம் நடக்கும்
9ம் நாள் திருநாளான பங்குனி உத்திர தினத்தன்று திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும் என்றும் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த இங்கு மட்டும் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது மிகவும் விசேஷம் என்றும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை உற்சவத்தை பார்த்தால் கல்யாணம் உடனடியாக நடைபெறும் என்றும் கூறினார்.