பிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பிரச்சாரம் செய்த பிரதமர் ஸ்காட் மாரிசன் மீது பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியாவில் வரும் 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதையொட்டி அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அல்புரியில் பிரதமர் ஸ்காட் பிரச்சாரம் செய்தார்.
பெண்கள் அமைப்பு
அப்போது அங்கு நாட்டின் பெண்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பிரதமர் ஸ்காட். கூட்டத்தில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார் ஸ்காட்.
தலையை உரசிச்சென்ற முட்டை
அப்போது கூட்டத்தில் இருந்த 25 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரதமர் மீது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் முட்டையை வீசினார். அந்த முட்டை பிரதமர் ஸ்காட்டின் தலையை உரசிச்சென்றது.
உடையாத முட்டை
இருப்பினும் அந்த முட்டை உடையவில்லை. இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
மூதாட்டிக்கு உதவிய பிரதமர்
இதில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் தடுமாறி விழுந்தார். அப்போது தன் மீது முட்டை வீசப்பட்டதையும் பொருட்படுத்தாமல், அவருக்கு உதவினார் பிரதமர் ஸ்காட் மாரிசன்.
|
பிரதமர் டிவிட்
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்காட், கீழே விழுந்த அந்த மூதாட்டியை தூக்க உதவி செய்ததோடு அவரை கட்டி அணைத்தேன், எங்கள் விவசாயிகள் தங்களுடைய பண்ணைகள் மற்றும் அவர்களது வீடுகளை இதுபோன்ற முட்டாள்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.