நிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்!
ஆஸ்திரேலியாவில் சீரழிவு காத்திருக்கிறது என்று பிரதமர் எச்சரித்துள்ளார்
சிட்னி: "கொரோனாவைரஸ் பாதிப்பால் ஆஸ்திரேலியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கப் போகிறது... பெரும் பொருளாதார சீரழிவை ஆஸ்திரேலியா சந்திக்கக் கூடும்" என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே இந்த பிரச்சினையால் பல ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார் மோரிசன். மேலும், வேலை கேட்டு பலரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடி வருவதாகவும் மோரிசன் தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸ் பாதிப்பால் மாபெரும் பொருளாதார சீரழிழை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 29 வருடமாக ஆஸ்திரேலியா பொருளாதார வளர்ச்சியில் இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனாவைரஸ் பிரச்சினையால் அது கீழே போக ஆரம்பித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது.
காற்றிலும் கொரோனா வைரஸ் பரவும்.. புதிய ஆய்வு திடுக் எச்சரிக்கை.. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்
பாதிப்பு
இத்தனைக்கும் கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர அரசு 1000 பில்லியன் டாலர் நிவாரண உதவிகளையும் அளித்துள்ளது. ஆனாலும் சரிவு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி வரும் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது... பப்கள், காசினோக்கள், சர்ச்சுகள், ஜிம்கள் என பலவும் மூடப்பட்டுள்ளன... எனவே ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
விண்ணப்பம்
வேலையில்லாத காலத்தில் வழங்கப்படும் வருமான உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பலரும் குவிந்ததால் அரசின் ஆன்லைன் வேலைவாய்ப்பு சேவை இணையதளம் முடங்கிப் போனது. கொரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து மீளும் வரை அரசு வழங்கும் உதவித் தொகை 550 டாலராக அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானதே இந்த கூட்டம் அலைமோதலுக்கு முக்கிய காரணம்.
சீரழிவு
1920 மற்றும் 30களில் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மிகப் பொருளாதர நெருக்கடியில் சிக்கி பெரும் சீரிழிவு ஏற்பட்டது... பல லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. அமெரிக்காவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிலும் இது பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது... கிட்டத்தட்ட 40 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சீரழிவால் உலகப் பொருளாதாரம் உருக்குலைந்து போனது... இப்போது கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலைதான் கொரோனாவால் ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
பாதிப்பு
இதுகுறித்து மோரிசன் மேலும் கூறுகையில், " மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்... இதுவரை இல்லாத நிலை உருவாகியுள்ளது... சில வாரங்களுக்கு முன்பு நாம் இதைப் பற்றி கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம்... பலர் வேலையை இழந்துள்ளனர். பலருக்கு பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் பலர் உள்ளனர்... இது மிகப் பெரிய பொருளாதார அதிர்ச்சி. நமது நாடு பல தலைமுறைகளாக சந்திக்காத பெரும் அதிர்ச்சி என்றார் மோரிசன்.
விதிகள்
உண்மைதான்.. ஆனால் ஆஸ்திரேலியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவும் கூட இப்படிப்பட்ட நிலையை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது... குறிப்பாக இந்தியா போன்ற பொருளாதாரத்தில் ஏற்கனவே பின்னடைவில் இருக்கும் நாடுகளின் நிலைதான் பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.. மோரிசன் மேலும் கூறுகையில், " ஆஸ்திரேலிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.. கடுமையான விதிகள் பின்பற்றப்படும்... நமக்கு வேறு வழி இல்லை. 2020ம் ஆண்டு நமக்கு மிக மிக கடினமான ஆண்டாக இருக்கும்" என்றார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 1600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.