மேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா
சிட்னி: இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசெலத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
அதற்கான அறிவிப்பை, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் வெளியிட்டு உள்ளார். நீண்ட ஆலோசனை மற்றும் பரிசீலனைகளுக்கு பிறகு இஸ்ரேல் தலைநகராக மேற்கு ஜெருசெலத்தை ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ஆஸ்திரேலியாவின் தூதுரகம் டெல் அவிவ் நகரிலேயே தொடர்ந்து இயங்கும் என்றும் மாரீசன் கூறியுள்ளார்.
தங்கள் நாட்டு தூதுரகத்தை உடனடியாக இஸ்ரேல் தலைநகரான மேற்கு ஜெருசெலத்திற்கு மாற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் மாரீசன் தெரிவித்துள்ளார்.
ஜெருசலம் தொடர்பாக இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. ஜெருசலம் நகரின் கிழக்குப் பகுதி பாலஸ்தீனம் வசம் உள்ளது. மேற்குப் பகுதி இஸ்ரேலிடம் உள்ளது. ஆனால் முழு ஜெருசலமும் தனக்கே என உரிமை கொண்டாடுகிறது இஸ்ரேல்.
இந்தப் பஞ்சாயத்துக்கு மத்தியில்தான் ஜெருசலமை தனது தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. இதை அமெரிக்கா உடனடியாக அங்கீகரித்தது. மேலும் சில நாடுகளும் அங்கீகரித்தன. ஆனால் பெரும்பாலான நாடுகள் இன்னும் இதுகுறித்து முடிவெடுக்காமல் உள்ளன. தற்போது ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
அதேசயம், கிழக்கு ஜெருசலம் எதிர்கால பாலஸ்தீன தலைநகர் என்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.