காதலுக்காக சதி வேலை...ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மல்கம் டர்ன்பல்லைக் கொல்ல திட்டமிட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொஹமது காமர் நிஜாம்தீன் என்பவர் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
மல்கமை கொல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக, புத்தகத்தில் தீவிரவாதிகளின பட்டியலை எழுதி வைத்திருந்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நிஜாம்தீன் கைது செய்யப்பட்டார். பின்னர், அந்த நோட்டில் இருந்த கையெழுத்தும், நிஜாம்தீனின் கையெழுத்தும் வேறு, வேறாக இருந்ததால் அவர் சில வாரங்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, வழக்குக்காக மொஹமது காமர் நிஜாம்தீன் செலவழித்த பணத்தை நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழங்கினர். இந்தநிலையில், மொஹமது காமர் நிஜாம்தீன் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரரான அர்சகன் கவாஜா தன்னுடைய கல்லூரியில் தனது காதலுக்கு போட்டியாக இருந்ததால் மொஹமது காமரை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார்.
சக மாணவனான இலங்கைச் சேர்ந்த இளைஞர் மொஹமது காமர் நிஜாம்தீனை, தீவிரவாதிகளுடன் தொடர்புப்படுத்தி போலீசில் சிக்க வைத்தது தெரிய வந்துள்ளது. அவரையே திட்டமிட்டு சதி வலையில் சிக்க வைத்த, அர்சகன் கவாஜாவை, சிட்னியில் போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் வம்சவழியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் உஸ்மான் கவாஜா, காயத்தில் இருந்து மீண்டு வந்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.