அரசின் ரகசிய தகவல்களை... வெளிநாடுகளுக்கு வழங்கியதாக... ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது!
சிட்னி: சீனா குறித்த ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் நீண்ட நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய செய்தியாளரை சீனா அரசு கைது செய்துள்ளது.
சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் செங் லீ. சீனாவில் பிறந்த இவர், தனது சிறு வயதிலேயே பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். ஆஸ்திரேலியாவிலேயே வளர்ந்து பட்டம் பெற்ற இவர், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆண்டில், சீனாவில் பணியாற்றி வருகிறார்
கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் காரணமாகச் சீனாவிலுள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது இவரது குழந்தைகள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டனர். அந்தச் சமயத்தில் சீனாவின் ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டி, செங் லீயை சீன அரசு தடுப்பு காவலில் வைத்தது.
இந்நிலையில், தற்போது சீனா திரும்பியுள்ள அவரது மகள்களை காண செங் லீக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். அதற்கு பதில் அளித்த சீன அரசு, செங் லீயை கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கைது செய்துவிட்டதாக தெரிவித்தது.
சுமார் ஆறு மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த செங் லீ கைது செய்யப்பட்டுள்ளதை இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் உறுதி செய்தன. குறிப்பாக, சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள செங் லீக்கு முழு உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், ஆஸ்திரேலியா அரசு சீனாவின் நீதித்துறைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, கடந்தாண்டு கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து சீனாவில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. செங் லீ தடுப்பு காவலில் வைக்கப்பட்ட போது, ஆஸ்திரேலியாவில் உள்ள சீன செய்தியாளர்களிடம் அந்நாட்டு அரசு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.