ரூ. 3.40 கோடி நிதி.. எனக்கு பணம் வேண்டாம்.. அறக்கட்டளைக்கே கொடுத்திருங்க.. சபாஷ் வாங்கிய குவாடன்!
சிட்னி: தற்கொலை செய்து கொள்ள தாயிடம் கயிறு, கத்தி கேட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் டிஸ்னிலேண்ட் செல்வதற்காக தனக்கு திரட்டி கொடுக்கப்பட்ட 3.40 கோடி ரூபாய் அன்பளிப்பை ஒரு அறக்கட்டளைக்கு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன், மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் அவன் உடல் வளர்ச்சிக் குன்றி காணப்படுகிறான்.
முகத்தோற்றம் காரணமாக குவாடனை பள்ளியில் சக மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அவன் மிகவும் மனஉளைச்சலுக்குள்ளானான்.
அழுத காட்சிகள்
இதனால் தற்கொலை செய்யும் எண்ணத்துக்கு சென்றுவிட்டான் குவாடன். மேலும் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்பதால் தூக்கு போட்டு கொள்ள கயிறு, கத்தி போன்றவற்றை தருமாறு அழுது அடம்பிடித்துள்ளான். மகனின் கதறலையும், கண்ணீரையும் பார்த்து உடைந்து போன யர்ராகா, மற்றவர்களை கேலி கிண்டல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தன் மகன் குவாடன் தற்கொலை செய்வதாக கூறி கதறி அழுத காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஆறுதல்
வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அதை பார்த்தனர். ஹக் ஜேக்மேன், ஜெஃப்ரி டீன் மோர்கன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் குவாடனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். துவார்ஃபிசம் எனப்படும் வளர்ச்சிக் குன்றிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிராட் வில்லியம்ஸ் தனது வீடியோவில் ஆறுதல் கூறியுள்ளார்.
3.40 கோடி ரூபாய்
மேலும் குவாடனை கவுரவிக்க GoFundMe என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு அந்த சிறுவனை டிஸ்னிலேண்டிற்கு அனுப்பவுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் டாலர்கள் மட்டுமே வசூல் செய்ய வில்லியம்ஸ் முடிவு செய்தார். ஆனால் அவருக்கு 4.75 லட்ச டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3.40 கோடி ரூபாய்) குவிந்துள்ளது.
குவாடன்
இந்த பணம் குவாடன் மற்றும் அவரது தாயை டிஸ்னிலேண்டை சுற்றி பார்க்குமாறு வழங்கப்பட்டது. ஆனால் குவாடனோ இந்த பணம் மொத்தத்தையும் ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு அனுப்புமாறு கூறிவிட்டான். கீர்த்தி சிறிதாக இருந்தாலும் மூர்த்தி பெரிது என்பார்களே அது போல் தான் சந்தோஷமாக இருப்பதற்காக திரட்டப்பட்ட பணத்தை அறக்கட்டளைக்கு வழங்க முன்வந்த குவாடனுக்கு சபாஷ் போடுவோம்.