அமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இன்று நடந்த பொது தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ள நயன் கேலக்ஸி நிறுவனம், மொத்தமுள்ள 151 தொகுதிகளில், 82 தொகுதிகளை தொழிலாளர் கட்சி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி தொழிலாளர் கட்சி 52 இடங்களில் முன்னணியில் உள்ளது. ஆளும் லிபரல் கட்சி கூட்டணி 48 இடங்கள் முன்னிலையில் உள்ளது.
ஒருவேளை, தற்போதைய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெரும்பட்சத்தில் அதன் தலைவரும், முன்னாள் தொழிலாளர் இயக்கத் தலைவருமான பில் ஷார்டன் (Bill Shorten) ஆஸ்திரேலியப் பிரதமராவார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இதனால், அக்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை மீண்டும் போட்டியிட்டுள்ள பிரதமர் ஸ்காட் மாரிசன் தோல்வியைத் தழுவினால், வரலாற்றில் மிகவும் குறுகியக் காலத்தில் பதவி வகித்த பிரதமர் என்ற பெயரை அவர் பெறுவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications