சிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்!
சிட்னி: தமிழ் புத்தாண்டை தமிழகத்தில் மட்டுமே தான் கொண்டாட வேண்டுமா? தமிழ் மற்றும் தமிழனின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள் தமிழ் புத்தாண்டை ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
நார்த் சோர் தமிழ் சங்கத்தின் அமைப்பு மூலம் சிட்னி வாழ் தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவிற்கு ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.அலிஸ்டர் ஹென்ஸ்கின்ஸ் (Alister Henskens) விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து தந்தார்.
சினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து!
பண்பாடு
விழாவில் பேசிய அவர் தமிழ் மக்கள் இவ்வாறு ஒன்று கூடி கொண்டாடுவதன் மூலம் தமிழ் பண்பாட்டை நாம் உணர்த்துகிறோம் என்று உரையாடினார். விழாவில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் அவர் ஆர்வத்துடன் கண்டு களித்தார். கணேஷ் மற்றும் பிரபா அவருக்கு சால்வை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினர்.
வரவேற்பு - குறிக்கோள்கள்
இந்த விழாவில் சங்கத்தின் சார்பாக நித்யா வரவேற்புரையாற்றினார்.இதை தொடர்ந்து சுபாங்கி North Shore தமிழ் சங்கத்தின் குறிக்கோள்களை பற்றி பேசினார். சரவணன் மற்றும் ஜெயந்தி இருவரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
அழகுக் குழந்தைகளின் பாடல்கள்
குழந்தைகள் அனைவரும் தாம் பயின்ற ஆத்திசூடி,திருக்குறள்,பாரதியார் கவிதைகள் போன்றவற்றை மேடையில் சொல்லி அனைவரையும் மகிழ்வித்தனர்.
குறள் விளக்கம்
சிட்னி தமிழ் பள்ளியின் தலைமை முதல்வர் மூர்த்தி அவர்கள் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லி குழந்தைகளை வழிநடத்தினார். குழந்தைகள் அனைவரும் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அனைவரையும் மகிழ்வித்தனர்.
கலாச்சார உடையில் பெண்கள்
குழந்தைகள் மட்டுமல்ல !!! பெண்கள் தமிழ் பாடல்களுக்கு ஏற்ப தமிழ் கலாசார உடை அணிந்து நடனம் புரிந்து அனைவரையும் மகிழ்வித்தினர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே குடும்பம் போல புத்தாண்டு விருந்தினை உண்டு மகிழ்ந்தனர் .
குழந்தைகளுக்குப் பரிசுகள்
விழாவிற்கு வந்திருந்த பெரியவர்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். இறுதியாக வனிதா நன்றியுரையாற்றினார்.
இச்செய்தியை சங்கத்தின் பொருளாளர் ரேகா அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மரக்கன்று நடும் திட்டம்
North Shore தமிழ் சங்கம் ரத்ததான முகாம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் வரும் மே 5ம் தேதி 75 மரக்கன்றுகளை நடப்போவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியை காப்போம்! வளர்ப்போம் ! வாழ்க தமிழ் மற்றும் வாழ்க தமிழ் மக்கள் !