ஆஸ்திரேலியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் 30 மடங்கு உருமாறியது எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
இந்த உருமாறிய கொரோனா வைரஸ், டெல்டா வகை வைரஸைவிட அதிவேகமாக பரவக் கூடியது எனவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர். இந்த புதிய வகை வைரஸுக்கு ஒமிக்ரான் (Omicron) என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது.
ஐரோப்பாவிலும்..
தென்னாப்பிரிக்கா உட்பட் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவ தொடங்கிய ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்கா நாடுகளுக்கான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவிலும் நுழைந்தது?
நமது நாட்டிலும் தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளின் விமான போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
2 பேருக்கு பாதிப்பு
இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் ஆஸ்திரேலியாவுக்குள்ளும் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிட்னி நகரில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து சிட்னிக்கு நேற்று முன்தினம் வந்த 2 பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது 2 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.,
தென்னாப்பிரிக்கா டூ சிட்னி
கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களையும் ஒமிக்ரான் வைரஸ் தாக்குகிறது எனவும் கூறப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை செயலிழக்க செய்யும் வகையில் அதிவீரியமிக்கது ஒமிக்ரான் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். உலக நாடுகள் அனைத்தும் ஒமிக்ரான் வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.