ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்
சிட்னி: அடுத்த ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் பள்ளிகளில் தமிழ் உட்பட புதிதாக 5 மொழிகள் கற்பிக்கப்பட உள்ளன என்ற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பொது மொழியாக இந்தி இருக்கலாம், அதுவே பொருத்தமானது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தெரிவித்த கருத்து பெரும் அமளி துமளிக்கு காரணமானது நினைவிருக்கலாம்.
ஆனால், எங்கோ தூரத்தில் உள்ள, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாகாணம், தனது பள்ளிகளில் கற்பிக்க உள்ள 5 புதிய மொழிகளில் ஒன்றாக தமிழையும் தேர்ந்தெடுத்துள்ளது.
சிட்னியை தலைநகராக கொண்ட இந்த மாகாணத்தில் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அங்குள்ள, அரசுப் பள்ளிகளில் தமிழ், இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மற்றும் மாஸிடோனியன் ஆகிய 5 மொழிகள் கற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 69 வகையான மொழிகளை கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஆப்ஷன்களாக கிடைக்கப்போகிறது.
சிட்னியின் மக்கள் தொகையில் 39 சதவீதம் பேர் வேறொரு நாட்டில் பிறந்தவர்கள் என்கிறது புள்ளி விவரம். எனவே, "மொழிகளைக் கற்றுக்கொள்வதில் நாம் உலகின் சிறந்த பயிற்சியாளர்களா இருக்க வேண்டும், பல மொழி கல்வி, உலகில் இணைக்கப்பட்ட சமூகமாக ஆஸ்திரேலியாவை முன்னணியில் கொண்டு செல்வதற்கான சிறந்த படிக்கட்டாகும். ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் உண்மையில் இருமொழி, இல்லையென்றால் பல மொழி" என்கிறார் சால்ட்.
மேற்கு சிட்னியில் உள்ள டார்சி சாலை அரசுப் பள்ளி மாணவர்கள் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுகிறார்கள். பள்ளி முதல்வர் ட்ரூடி ஹாப்கின்ஸ் கூறுகையில், முதலில் தங்கள் தாய்மொழியைப் பேசக் கற்றுக்கொள்வது, குழந்தைகளின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துகிறது.
அனைவருக்கும் மிகப் பெரிய மொழி ஆங்கிலம், ஆனால் இரண்டாவது மொழியைப் பேசும் அதிக குழந்தைகளின் சாய்ஸ் இந்தி என்றார்.
இந்தி மொழி பேசும் குழந்தைகள் எங்கள் பள்ளிக்கு வருவதால் இது எங்கள் பள்ளியின் விரிவாக்கத்திற்கு உதவும் என நினைக்கிறோம் என்கிறார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், எங்கள் பள்ளியில் பயில்வோரின் தாய்மொழியை கணக்கில் கொண்டால், இரண்டாவது பெரிய மொழி தமிழ், எங்கள் பள்ளியில் தமிழ் பேசும் குழந்தைகளுக்கும் இதே வசதி இருக்க விரும்புகிறோம். எனவே அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடத்தையும் கற்பிக்க உள்ளோம் என்றார்.
பிரிட்டனில், மாணவர்கள் 14 வயது வரை ஒரு மொழியைப் படிப்பது கட்டாயமாகும், அமெரிக்க மாணவர்களில் 50 சதவீதம் பேர் தங்கள் இறுதித் தேர்வுகளுக்கு ஒரு மொழியை கட்டாயமாகப் படிக்கிறார்கள்.