கிறிஸ்துமஸ் தீவின் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழ் அகதி குடும்பம்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான பகுதியில் ஈழத் தமிழ் அகதி குடும்பம் ஒன்று சிக்கி தவித்து வருகிறது.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து அழைத்து செல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க, கிறிஸ்துமஸ் தீவில் அவர்கள் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். இதே கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்திற்கு இது பற்றிய எந்த ஒரு தகவலும் முன்னரே தெரிவிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த பிரியா- நடேசலிங்கம் எனும் ஈழத் தமிழ் அகதி குடும்பத்தின் விசா கடந்த மார்ச் 2018ல் காலாவதியானது. இதனையடுத்து இவர்கள் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.
அண்மையில் இக்குடும்பத்தினர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த நிலையில் நீதிமன்ற தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இக்குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும் கிறிஸ்துமஸ் தீவில் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். ஆனால் அங்கு ஏற்கனவே உள்ள ஈழத் தமிழ் அகதி குடும்பத்தினருக்கு இது குறித்து தெரிவிக்காதது அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல்- சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 803 ஆக அதிகரிப்பு
ஆஸ்திரேலிய அரசின் இம்முடிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள இக்குடும்ப வழக்கறிஞர், அனைவரிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருக்கும் போது, பிரியா குடும்பத்தை கிறிஸ்துமஸ் தீவில் வைத்திருப்பது சரியாக இருக்காத் என்றார்.