இது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்!
மூன்று கண்களையுடைய பாம்பின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண்களை உடைய வினோத பாம்பின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவின் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் வடக்கு மண்டல வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் வினோத பாம்பு ஒன்றை கண்டனர். அந்தப் பாம்பின் அருகில் சென்று பார்த்தபோது, அதற்கு மூன்று கண்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறந்து மூன்று மாதங்களே ஆன கார்பெட் மலைப் பாம்பு வகையைச் சேர்ந்த ஆண் பாம்பு அது என தெரிய வந்தது. செல்போன் மூலம் அந்த பாம்பை ஊழியர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது பாம்பின் மூன்றாவது கண், மற்ற இரண்டு கண்களைப் போலவே செயல்படுவது அவர்களுக்கு தெரிய வந்தது.
பேஸ்புக்கில் வெளியீடு:
இந்தப் புகைப்படங்களை வடக்கு மண்டல வனவிலங்கு பூங்கா நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது. அதில், ‘இந்த மூன்று கண்கள் கொண்ட பாம்பு, வறட்சி நிலவப்போவதற்கான அறிகுறியாகும்.
பாம்புகளின் குணம்:
இந்த பாம்பை எங்கள் குழுவினர் ஆர்ம்ஹென் நெடுஞ்சாலையில் கண்டறிந்தனர். இது 40செ.மீட்டர் நீளம் கொண்டது. பாம்புகள் சாதாரணமாக இயற்கை காரணிகளுடன் நன்கு தொடர்பு கொண்டது. இயற்கையில் ஏதோ மாற்றம் நிகழப்போகிறது என்பதை உணர்த்தவே இந்த பாம்பு வெளிப்பட்டிருக்கிறது' எனத் தெரிவித்துள்ளது.
வைரலான புகைப்படம்:
பெரும்பாலும் கதைகளில் மட்டுமே கேள்விப்பட்ட மூன்று கண் பாம்பை நிஜத்தில் புகைப்படமாக பார்த்த நெட்டிசன்கள், அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். மூன்று கண்களோடு அந்தப் பாம்பு அழகாக இருப்பதாக பலர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இதனால் அந்த பாம்பின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
உயிரோடு இல்லை:
ஆனால், இது வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் தற்போது அந்தப் பாம்பு உயிரோடு இல்லை. பூங்கா ஊழியர்களிடம் பிடிபட்ட சில வாரங்களிலேயே அது உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘இது மிகவும் துரதிருஷ்டவசமானது' எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.