தென் பசிபிக் கடலில் நியூ கலிடோனியா அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
சிட்னி: தென் பசிபிக் கடலில் நியூ கலிடோனியா அருகே 7.7 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு அருகே உள்ள தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பகுதி நியூ கலிடோனியா. இது பிரான்சிற்கு சொந்தமான பகுதியகும். இந்த பகுதிக்கு அருகே கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென் பசிபிக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அடுத்த 3 மணி நேரத்தில் வரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து, நியூ கலிடோனியா, வனடு பகுதிகளுக்கு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர் .
ஆனால் எச்சரிக்கை விடுத்தபடி எந்த பாதிப்பும் நியூசிலாந்து, நியூ கலிடோனியா, வனடு பகுதிகளில் ஏற்படவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் சுனாமி எச்சரிக்கையை விலக்கி கொண்டன.