அது எங்க கடமை.. அதைத்தானே செய்தோம்.. பாராட்டு மழையில் நனையும் 2 நர்சுகள்!
சிட்னி: எங்களைப் பொறுத்தவரை நோயாளி யாராக இருந்தாலும் அவர் நோயாளிதான். அதேபோல ஒரு உயிர் என்றால் உயிர்தான்.. அது இங்கிலாந்து பிரதமராகவே இருந்தாலும் கூட எங்களைப் பொறுத்தவரை அவர் நோயாளிதான் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளித்த நர்சுகள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தாக்குதலுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். தன்னைச் சிறப்பாக கவனித்துக் கொண்டதாக இரண்டு நர்சுகளை அவர் பெயர் குறிப்பிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். ஆனால் அந்த செவிலியர்கள் மிகவும் தன்னடக்கத்துடன் போரிஸ் ஜான்சன் எங்களைப் பொறுத்தவரை நோயாளி. ஒரு நோயாளியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ, பார்த்துக் கொள்ள வேண்டுமோ அதை நாங்கள் செய்தோம்.
எந்த உயிரும் எங்களுக்கு முக்கியம். இங்கிலாந்து பிரதமராக இருந்தாலும் கூட அவர் எங்களுக்கு நோயாளிதான். அந்த உயிரும் எங்களுக்கு முக்கியம்தான் என்று கூறியுள்ளார் அந்த இரு நர்சுகளும். இரு செவிலியர்களில் ஒருவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜென்னி மெக்கீ. அவர் கூறுகையில், நாங்கள் அங்கு ஒரு நோயாளிக்கு செய்ய வேண்டிய பணிவிடையைச் செய்தோம் என்றார் புன்னகையுடன்.
இன்னொரு செவிலியரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பிதர்மா கூறுகையில், எங்களுக்கான பொறுப்பு அதிகமாகவே இருந்தது. அதை நாங்கள் சரியாகவே செய்தோம் என்று நினைக்கிறோம் என்றார். மெக்கீ கூறுகையில், மீடியாக்கள் மிகுந்த தீவிரமாக இந்த மருத்துவமனையை முற்றுகையிட்டிருந்தனர். அவர்களை சமாளிக்கத்தான் உண்மையில் கஷ்டமாக இருந்தது என்றார் சிரித்தபடி.
இரு நர்சுகளும் டிவி நியூசிலாந்துக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். ஒரு குழுவாக நாங்கள் ஒரு நோயாளியை எப்படி கவனிக்க வேண்டுமோ அப்படிக் கவனித்தோம். எங்களால் முடிந்ததை செய்தோம். வழக்கம் போலத்தான் நாங்கள் பணியாற்றினோம். அது வழக்கமான பணியாகவே எங்களைப் பொறுத்தவதரை இருந்தது என்றனர்.
லண்டன் தாமஸ் மருத்துவமனையில்தான் போரிஸ் ஜான்சன் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏப்ரல் 5ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் நடந்த ஒரு சுவாரஸ்யத்தை பிதர்மா பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், போரிஸ் ஜான்சனிடம் சென்று உங்களை எப்படி கூப்பிட வேண்டும் என்று அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் போரிஸ் என்றே கூப்பிடலாம் என்றார். அது எனது பதட்டத்தை தணித்து இயல்பாக்கியது. மேலும் அவர் மிகவும் இயல்பாக இருந்தார், பார்மாலிட்டி பார்க்கவில்லை.
அதுவரை நான் எந்த விஐபியையும் கவனித்துக் கொண்டதில்லை. அதுதான் முதல் முறை. ஆனால் இங்கிலாந்து பிரதமர் விஐபி போல நடந்து கொள்ளவில்லை. சாதாரண நோயாளி போலத்தான் இருந்தார். எனவே எங்களது பணி இயல்பாக, எளிதாக இருந்தது. தற்போது இந்த இரு நர்சுகளுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. போரிஸ் ஜான்சன் மட்டுமல்லாமல், போர்ச்சுகல் அதிபர் மார்சலோ ரெபெலோ டி சவுசா, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.
என்ன நடக்குதுன்னே தெரியலை.. நாங்க எங்க வேலையத்தானே செய்தோம் என்று இந்த இரு நர்சுகளும் சிரித்தபடி இந்த பாராட்டுகளை ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.