டெல்டா கொரோனா.. வேக்சின் மட்டும் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வராது.. ஆஸ்திரேலியா பிரதமர் பரபரப்பு
சிட்னி: டெல்டா கொரோனா பாதிப்பால் ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேக்சின் பணிகள் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. இதற்கு டெல்டா கொரோனா வைரசே முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்
இப்போது இந்தியாவில் டெல்டா கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் உலகின் மற்ற நாடுகளில் டெல்டா கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
டெல்டா கொரோனா
டெல்டா கொரோனாவால் இப்போது மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மூலம் இத்தனை காலம் ஆஸ்திரேலியா கொரோனாவை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தது. ஆனால் வேக்சின் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அந்நாடு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமலேயே இருந்தது.
ஆஸ்திரேலியா ஊரடங்கு
இதனால் டெல்டா கொரோனா பரவ தொடங்கியதும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பல்வேறு ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உலகின் மற்ற முக்கிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் மிகக் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. டெல்டா கொரோனா அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
முடிவுக்குக் கொண்டு வராது
இந்நிலையில், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், "வேக்சின் பணிகள் மட்டும் கொரோனா ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வராது. அதாவது, நாட்டில் தேவைக்கு ஏற்ப வேக்சின் கிடைப்பதில்லை. எனவே, வேக்சின் பணிகளின் வேகத்தை நாம் உயர்த்த வேண்டும். அது ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க உதவும் என்றாலும் வேக்சின் பணிகள் முடியும் வரை ஊரடங்கை வாபஸ் பெற முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பொருளாதாரம்
டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் அங்குள்ள பல முக்கிய நகரங்களில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வேக்சின் பணிகள் மந்தமாகவே நடைபெறுவதால், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு மிகவும் சிரமப்பட்டு வருகிறது. மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஆஸ்திரேலியாவுக்குப் பல மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வேக்சின்
டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின்களின் தடுப்பாற்றல் குறைவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும்கூட, தீவிர டெல்டா கொரோனா பாதிப்பையும், உயிரிழப்புகளையும் வேக்சின்கள் தடுப்பதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் அனைவரும் இரண்டு டோஸ் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையே ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.