ஆப்கானில் 39 அப்பாவிகள் சுட்டுப் படுகொலை- போர்க்குற்றம் செய்த ஆஸி. வீரர்கள் மீது நடவடிக்கை
சிட்னி: ஆப்கானிஸ்தானில் 39 அப்பாவி பொதுமக்களை தங்களது நாட்டு ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக சுட்டுப் படுகொலை செய்தது போர்க்குற்றம் என்றும் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் நடவடிக்கையில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவின் ராணுவ வீரர்கள் 2009- 2013-ம் ஆண்டு காலப் பகுதியில் 39 அப்பாவி பொதுமக்களை சட்டவிரோதமாக சுட்டுப் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக ஆஸ்திரேலியா ராணுவம் கடந்த 4 ஆண்டுகளாக மேஜர் ஜெனரல் நீதிபதி பால் பிரெட்டன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. தற்போது இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 39 பேரை சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த ராணுவ தளபதி ஆங்கஸ் கேம்பல்(Angus Campbell) வீரர்களின் செயல் வெட்கக் கேடானது என வருத்தம் தெரிவித்தார். தற்போதைய விசாரணையில் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் 19 ராணுவ வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மொத்தம் 36 போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டும் உள்ளன.
அத்துடன் விசாரணை அறிக்கையானது மொத்தம் 143 பரிந்துரைகளை அளித்துள்ளதாகவும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் ராணுவ தளபதி கேம்பல் கூறியுள்ளார்.