இடைதேர்தலில் அசத்தல் வெற்றி.. மக்கள் மத்தியில் உயர்ந்த முதல்வர் இமேஜ்.. கலக்கும் எடப்பாடி பழனிசாமி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு ஆட்சியையும், அதிமுக கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு ஆட்சியையும், அதிமுக கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் தன்னை ஒரு அரசியல் சாணக்கியர் என்று நிரூபித்துள்ளார்.
ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியமானது மக்கள், தொண்டர்கள் ஆதரவு . அதேபோல் இன்னொரு முக்கியமான விஷயம் இமேஜ். ஒரு அரசியல் தலைவரை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
உலகம் முழுக்க அரசியல் தலைவர்கள் தங்களுக்கு என்று இமேஜை உருவாக்கிக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள். அமெரிக்க அரசியலில் அதிபர் தேர்தலில் நிற்பவர்களின் இமேஜ் என்பது மிக மிக முக்கியமானது. மிக சிறிய விஷயம் கூட அதிபர் தேர்தலில் நிற்பவர்களின் எதிர்காலத்தை மாற்றிவிடும்.
பல நூறு கோடி செலவு செய்து டொனால்ட் டிரம்ப் தனது இமேஜை தேர்தலுக்கு முன் உருவாக்கி மக்கள் முன் கொண்டு சென்றார். அதில் வெற்றியும் பெற்றார். அதே போலத்தான் தனக்கு என்று சிறப்பான இமேஜ் ஒன்றை உருவாக்கி உள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி. தன்னுடைய நலத்திட்டங்கள் முன் இவர் மக்கள் மத்தியில் தலைவராக உருவெடுத்துள்ளது. இவர் ஆட்சிக்கு இரண்டரை வருடங்கள் முன்பு வந்த போது எப்படி இருந்தாரோ அப்படி இப்போது இல்லை.
மொத்த தமிழக அரசியலை கரைத்து குடித்து, ஆட்சி அதிகாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொண்டு, மிக திறமையாக முதல்வர் பழனிசாமி ஆட்சியை வழி நடத்தி வருகிறார். முன்பு அவருக்கு இருந்த இமேஜ் வேறு, இப்போது இருக்கும் இமேஜ் வேறு. மிக கட்சிதமாக அவர் தனது முடிவுகளை நேர்த்தியாக எடுத்து வருகிறார்.
இரண்டரை வருடங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி ஆட்சியை பொறுப்பை ஏற்ற போது, இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அவர் இப்போதும் கூட 1 மாதத்தில் ஆட்சி கவிழும், ஆட்சி கவிழும் என்று கூறிக்கொண்டேதான் இருக்கிறார்.ஆனால் முதல்வர் பழனிசாமியோ திறமையான முடிவுகள் எடுத்து, முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்தி வருகிறார்.
முதல்வரின் திறமை எல்லோருக்கும் தெரிந்தது லோக்சபா தேர்தல் உடன் தமிழகத்தில் நடந்த 22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலின் போதுதான். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆட்சி கவிழும் என்று கனவு கண்ட போது, மிக சாதுர்யமாக 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆன போது அதிக பட்சம் 1 மாதம் இவர் இருப்பாரா என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அனைத்தையும் கடந்து, இரண்டரை வருடம் ஆண்டுவிட்டார். இந்த இரண்டரை வருடத்தில் உட்கட்சி பிரச்னையை தீர்த்து, கட்சியையும் சரியான திசைக்கு கொண்டு சென்றுள்ளார்.
டிடிவி தினகரனின் எதிர்ப்பை சமாளித்து , திமுகவின் இடைத்தேர்தல் ஆயுதத்தை எதிர்கொண்டு தொடர்ந்து ஆட்சி அமைத்து வருகிறார். அமமுக கட்சியை மொத்தமாக மறக்கடித்து, மக்கள் மத்தியில் அதிமுக ஒரே இயக்கம், எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்று அழுத்தமாக நிரூபித்தார். கட்சியை விட்டு சென்ற முக்கிய உறுப்பினர்கள் பலர் இதனால் மீண்டும் கட்சிக்கு திரும்பி வந்தனர்.
அதே சமயம் பாஜக, பாமக, தேமுதிக என்று வாக்கு வங்கி உள்ள பெரிய கட்சிகளையும் அரவணைத்து சிறப்பான கூட்டணியை உருவாக்கி உள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் மிக சிறப்பான தலைவராக ஆட்சியையும், கட்சியையும் முதல்வர் பழனிசாமி வழிநடத்தி வருகிறார். அதேபோல் தன்னுடைய ஆட்சியின் பல திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதிலும் முதல்வர் கவனத்துடன் இருக்கிறார். சேலம் 8 வழி சாலை திட்டம், தமிழகம் முழுக்க புதிய சாலைகள். புதிய 6 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை, எலக்ட்ரிக் பேருந்துகள், தமிழகம் முழுக்க செய்யப்படும் பல்வேறு மராமத்து பணிகள் என்று பல புதிய விஷயங்களை தன்னுடைய ஆட்சியின் கீழ் அவர் தமிழகத்திற்கு பெற்றுத் தருகிறார்.
முக்கியமாக தன்னுடைய 3 நாட்டு வெளிநாட்டு பயணம் மூலமும் அவர் தமிழகத்தில் பல கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுத் தந்துள்ளார். கடந்த 40வருடத்தில் முதல்முறையாக வெளிநாடு சென்று முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
வெளிநாடு சென்றால் என்ன, எப்போதும் தான் ஒரு விவசாயி, மக்களுக்காக இங்கே வந்து இருக்கிறேன் என்பதையும் தொடர்ந்து நிறுவி வருகிறார். வெளிநாட்டில் பசு உள்ளிட்ட கால் நடை வளர்ப்பு குறித்து முதல்வர் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு எல்லா முத்தாய்ப்பாக முதல்வர் பழனிசாமி செய்த இன்னொரு அதிரடிதான் நடந்து முடிந்த 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல். தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கட்சி தோல்வி அடைந்துள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்றுதான் வெளியானது. இதில் இரண்டு தொகுதியிலும் அதிமுக கட்சியே வெற்றிபெற்றது.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிபெற்றார். பலரும் திமுக வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் தன்னுடைய அபாரமான பிரச்சாரம் மூலம் மக்களை தன் பக்கம் இழுத்தார். இரண்டு தொகுதிகளிலும் தன்னுடைய பலத்தை, அதிமுக ஆட்சியின் பலத்தை நிரூபித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்றார். 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் புகழேந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார் முத்தமிழ்ச்செல்வன்.
அதேபோல் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94,562 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ரூபி மனோகரன் பெற்ற வாக்குகள் 62,229 ஆகும். இந்த இரண்டு தொகுதிகளிலும் இதற்கு முன் திமுக கூட்டணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது அதை அதிமுக கைப்பற்றி உள்ளது.
கணிப்புகளை பொய்யாக்கி கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, தான் ஒரு மிக சிறந்த தலைவர் என்பதை முதல்வர் பழனிசாமி நிரூபித்துவிட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் ஆட்சியை மிக சிறப்பாக வழி நடத்த, அதிமுகவில் தான்தான் சிறந்த ''ஆப்ஷன்'' என்று முதல்வர் பழனிசாமி மக்களுக்கு உணர்த்திவிட்டார். அதற்கு மக்கள் கொடுத்த பரிசுதான் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்றும் கூட கூறலாம்.
RECOMMENDED STORIES