நாராயணசாமி போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு.. கே.எஸ். அழகிரி, டிராபிக் ராமசாமி நேரில் வாழ்த்து
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
இன்று மூன்றாவது நாளாக ஆளுநர் மாளிகை வெளியே தர்ணா போராட்டம் நடத்திவரும் நிலையில், முதலமைச்சரின் தர்ணா போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் வந்து ஆதரவு தெரிவித்து, போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவர்களுக்கு மட்டுமே மக்களின் தேவைகள் அறிந்து செயல்பட முடியும். நிர்வாகியால் மக்கள் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியாது.
முடக்கப் பார்க்கிறார் மோடி
மோடி உத்தரவுபடி மாநில அரசை முடக்கும் வேலையை கிரண்பேடி செய்துவருவதாக அழகிரி குற்றம்சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கீழ்மைப்படுத்தும் வேலையை கிரண்பேடி செய்து வருவதாகவும், மோடியின் பாதுகாவலர்களான ஆளுநர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றியை துரிதப்படுத்துகின்றனர் என்றும் அழகிரி தெரிவித்தார்.
டிராபிக் வாழ்த்து
இதேபோல் தர்ணா போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேரில் வந்து முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசும்போது முதல்வரின் போராட்டம் நியாயமானது, அது வெற்றி பெறும் என்று கூறி முதல்வரையும் அவரது அமைச்சர்களையும் வாழ்த்தி விட்டுச் சென்றார்.
சஞ்சய் தத் ஆவேசம்
இதேபோல காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில மேலிடப் பொருப்பாளரும் சஞ்சய்தத் போராட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கிரண் பேடியையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் போராட்டம்
சஞ்சய் தத் பேசுகையில், மக்கள் நலனுக்காக நடைபெற்றுவரும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வந்துள்ளதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் ஆளுநர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை என்றும், புதுச்சேரியில்தான் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் தினந்தோறும் நடவடிக்கைகளில் தலையிட்டு மக்கள் நலத்திட்டங்களை தடுத்து வருகிறார் என குற்றம்சாட்டினார்.
மக்களுக்கு எதிரான பேடி
பிரதமர் மோடி கிரண்பேடி மூலம் புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தி புதுச்சேரி மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கிரண்பேடி புதுச்சேரி மக்களுக்கு எதிரானவர் என்றும், டெல்லி தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர் என சாடிய அவர், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாகவும் சாடினார்.
கிரண் பேடி தூக்கி எறியப்படுவார்
வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்றவுடன், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் கிரண்பேடி உடனடியாக தூக்கியெறியப்படுவார் என சஞ்சய்தத் ஆவேசமாக தெரிவித்தார்.