குடிநீர் வசதி.. திறன் வகுப்பறைகள்.. பள்ளிக் கல்வித்துறையில் புரட்சி செய்யும் தமிழக அரசு
சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு, முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் தந்து வருகிறது. சட்டசபையில் கடந்த ஆண்டு, 110வது விதியின் கீழ் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த பல முக்கிய அறிவிப்புகள் பள்ளிக்கல்வித்துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளைப் பாருங்கள்:
பள்ளி மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும், 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 48 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தகவல் தொழில் நுட்ப உதவியுடன் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுப்பதற்கு, ஏதுவாக 2283 திறன் வகுப்பறைகள் 42 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள, புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு, சீரிய முறையில் பயிற்றுவிக்க ஏதுவாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும். மேலும் தலைமை ஆசிரியர்கள் அவர்களது தலைமை பணியினை பண்பினை மேம்படுத்திக் கொள்வதற்காக பயிற்சியும், அலுவலர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சியும், தேசிய ஆசிரியர் தகவுக்கான (National teacher portal), கட்டகங்கள் (Modules) உள்ளீடு செய்தல் சார்ந்த பயிற்சியும், மற்றும் இதர பயிற்சி, 35 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம், 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, கல்வி கற்பிக்கும் தரத்தை, மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, பள்ளிகள், மாதிரி பள்ளிகளாக செயல்படும் விதத்தில், ஒரு பள்ளிக்கு 50 லட்சம் வீதம் 16 கோடி ரூபாய் செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் முன்னோடித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இடையில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் 11 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இது மட்டுமா, தமிழக அரசு பல முன்னோடி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறது. அதில் ஒன்றுதான், பள்ளி, மாணாக்கர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டமாகும். பள்ளி கல்வித் துறையின் இந்த திட்டத்தின் மூலம், மாணவர்கள், கல்வி ஆண்டு முழுவதும் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லவும், மீண்டும் வீடு திரும்பவும், பஸ் பாஸ் திட்டம் பலன் அளிக்கிறது. இதனால் பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்துள்ளது.
பள்ளி கல்வித் துறையின் கீழ் மற்றொரு புரட்சிகர திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்தான் அது. இதனால் மாணவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பஸ் வசதி அதிகம் இல்லாத கிராமங்களிலிருந்தும், பள்ளிகளுக்கு மாணாக்கர்கள் வருகை தர முடியும்.
பள்ளி கல்வித் துறையின் திறன் தேர்வு நலத்திட்டத்தின்கீழ், கல்வி மேம்பாட்டு நன்மை 9 ஆம் வகுப்பு முதல் உயர்படிப்பு வரை, மாதத்திற்கு ரூ .500 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதுமட்டுமா, தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை வளர்க்கும் வகையில் 'கல்வித் தொலைக்காட்சி' என்ற பெயரில் பிரத்யேகமான டிவி சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக்கட்டிடத்தில் 8வது தளத்தில், இதற்கான படப்பிடிப்பு அரங்கு, ஒளிப்பதிவு, நிகழ்ச்சி தயாரிப்பு கூடம் செயல்படுகிறது. மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்வித்தொலைக்காட்சிக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கல்வித்தொலைக்காட்சியின் முதல் ஒளிபரப்பை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக கல்வித் தரம் தேசிய அளவில் முன்னிலையில், இருக்க, தமிழக அரசின் கல்வி வளர்ச்சி திட்டங்கள்தான் அடிப்படையாக அமைந்துள்ளன.
RECOMMENDED STORIES