தமிழ் வளர்ச்சி துறைக்கு அள்ளிக் கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, பலதரப்பினருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும், அரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வாயிலாக, பல நலத்திட்டங்களை தொடர்ந்து, செயல்படுத்தி வருகிறது. தமிழ் வளர்ச்சித்துறைக்கும் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில் பல்வேறு பிற மாநிலங்களை ஒப்பிட்டால், பத்திரிக்கையாளர்கள் நலன் பேணுவதில், தமிழக அரசு முன்னிலையில் இருக்கிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு, பத்திரிகையாளர்களின் குடும்ப நல நிதி வழங்கப்படுகிறது. ஆசிரியர், துணை ஆசிரியர், நிருபர், புகைப்பட பத்திரிக்கையாளர், பிழை திருத்துவோர் என்ற பிரிவில் குறைந்தது 20 ஆண்டுகளாக பணியாற்றிய, பணியிலுள்ள காலகட்டத்தில் மரணமடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. ரூ.50,000 முதல் ரூ. 2 லட்சம் வரையில் இந்த பிரிவின்கீழ் நிதி உதவி வழங்கப்படும்.
இதேபோல, ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர் இறந்த பிறகு, அவர் மனைவிக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ரூ.2000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50,000 வரை, நிதி உதவி வழங்கப்படுகிறது. 20 ஆண்டுகளாக பணியாற்றிய மற்றும் அசாதாரண சூழ்நிலையில் உள்ள ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ .4000 வழங்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சித் துறைக்காக கடந்த வருடம் சட்டசபையில் விதி எண் 100இன் கீழ் முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அவர் கூறுகையில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குப் பாடுபட்டவர்களின் வாழ்வியலைப் பன்முக நோக்கில் ஆராய்ந்து, வளரும் தலைமுறையினரும் எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், ஆய்வுகள் நடத்தப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத்தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும் என்றார் முதல்வர். இதற்கென ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது தமிழக அரசு.
உலக நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தாய்மொழியையும், கலையையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்கும் நோக்கில், அங்குள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, அவர்கள் மேற்கொண்டு வரும் தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என்று முதல்வர் அதிரடியாக அறிவித்தார். இதன்படி 2020ம் ஆண்டில், உலக தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெற உள்ளது.
ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, 'சொற்குவை' என்ற திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
சொன்னதைபோலவே, sorkuvai.com என்ற வலைதளத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டின்போது, இந்த சொற்குவை வலைதளம் தொடங்கப்பட்டது.
இதில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களை பதிவு செய்தல், சொற்களின் தொடராக்கப் பரிமாணங்களைப் பதிவு செய்தல், சொற்களுக்கான பொருள் விளக்கத்தைத் தேடும் வசதியை அமைத்துக் கொடுத்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொல்லே மீளவும் வராமல் தடுத்தல் மற்றும் புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு, அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலா்களும், மொழியியல் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (M.A.) பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தெரிவின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக தலா 2,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும்,இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பாக வெளியிட்டார்.
RECOMMENDED STORIES