தினசரி 8 கொலை விழுகிறது… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க புரட்சி தேவை: கருணாநிதி
தமிழகத்தில் நாளொன்றுக்கு 8 கொலைகள் நடப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க புரட்சி ஒன்று தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பால் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய கருணாநிதி, தமிழக அரசை கடுமையாக சாடினார்.
யாரை எதிர்த்து ஆர்பாட்டம்
இன்றைக்கு யாரை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றால். நம்மால் பதில் சொல்ல முடியாது. காரணம் நம்மால் எதிர்க்கப்படுகிறவர்கள், நம்மால் இந்த நேரத்தில் விமர்சிக்கப்படுபவர்கள் யாரும் இல்லை.
எங்கே இருக்கிறது
தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறது,அந்த அரசுக்குப் பெயர் அ.தி.மு.க. அரசு என்று சொல்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்று தேடித் தேடிப் பார்த்தால், கோட்டையிலே இருக்கிறதா? கொலு மண்டபத்திலே இருக்கிறதா? எந்தக் கோட்டத்திலே அந்த அரசு இருக்கிறது என்று நாம் தேட வேண்டிய நிலைமையிலே, அந்த அரசு இன்றைக்கு எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றது.
யாருடைய அரசு இது?
இன்றைக்கு இங்கே இருக்கின்ற அரசு ஜெயலலிதா அரசா? அல்லது பன்னீர்செல்வம் அரசா? என்று தெரியாத சூழ்நிலையில் எந்த அரசைக் கண்டிப்பது என்று தெரியாமல் நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் பால் விலை ஏறிவிட்டது. பஸ் கட்டணம் ஏற்கனவே உயர்த்தப்பட்டு விட்டது.
மொட்டையோ, தாடியோ
தமிழ்நாட்டு மக்கள் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரைப்பார்த்து, யாரைக் கண்டித்து, எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று கேட்பதென்றால் ஆளுகிற பொறுப்பிலே யாரும் இல்லை. இருந்தவர்கள் எல்லாம் மொட்டை போட்டுக் கொண்டோ, தாடி வளர்த்துக் கொண்டோ, அடையாளம் தெரியாமல் இன்றைக்கு காட்சி தருகிறார்கள்.
கேட்க வழியில்லையே
அப்படிப்பட்ட ஒரு ஆட்சியில், தி.மு.க. காரனாகிய நான், யாரைத் தேடிப்பிடித்து, அய்யா உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன வழி சொல்லப் போகிறீர்கள் என்று கேட்க வழியில்லை. காரணம், அவர்கள் யாரும் நம்மைப் பார்ப்பதும், பார்க்க விரும்புவதும் இல்லை, விரும்பினாலும் பதில் சொல்லத் தயாராக இல்லை.
மக்களுக்கு பாதிப்பு அதிகம்
இந்த நிகழ்ச்சிக்கு முதலில் நான் வருவதாக இல்லை. நானும் வருவதாக விளம்பரப்படுத்தி விட்டார்கள் என்று கூறியதால், எனக்கு உடல் நிலை இல்லாத சூழ்நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல், என்னை விட தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே பாதிக்கப்பட்டுக் கிடக்கின்ற மக்களைக் காப்பாற்ற, பாதுகாக்க இன்றைக்கு தமிழகத்திலே இருக்கின்ற ஒரேயொரு இயக்கம் தி.மு.க.தான்.
எட்டு கொலைகள்
தமிழ்நாட்டில் இன்று ஒவ்வொரு நாளும் ஏழு கொலை, எட்டு கொலை, பத்து கொலை என்று நடைபெறுகிறதே, சட்டம்- ஒழுங்கு, அமைதி இதைப் பற்றிய பிரச்சினைகளைப் பற்றி யாரும் ஆட்சியிலே இருப்போர் கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க புரட்சி ஒன்று தேவைப்படுவதாகவும் கருணாநிதி கூறினார்.