தமிழகம், ஆந்திராவில் ஜனவரியில் மட்டும் கரை ஒதுங்கிய ஆமைகள்... 1122!
சென்னை: கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரத்தில் 1122 பெரிய சைஸ் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மெரீனா கடற்கரை, திருவொற்றியூர், நீலாங்கரை மற்றும் மரக்காணம் கடலோரத்தில் இவை கரை ஒதுங்கின.
இந்த ஆமைகள் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் ஆகும். கடல் ஆமைகள் செத்து கரை ஒதுங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறதாம்.
மெரீனாவில் 145 ஆமைகள்
மெரீனா கடற்கரை, நீலாங்கரை இடையிலான பகுதியில் மட்டும் 145 ஆமைகள் இறந்து ஒதுங்கின.
நீலாங்கரை - மரக்காணத்தில்
நீலாங்கரை- மரக்காணம் இடையிலான பகுதியில் மட்டும் 226 ஆமைகள் இறந்து ஒதுங்கின.
ஆந்திராவில் 547ஆமைகள்
ஆந்திர கடலோரத்தில் 547 கடல் ஆமைகள் இறந்து ஒதுங்கின. இவை அனைத்தும் நெல்லூர் பகுதியில் கரை ஒதுங்கின.
மீன்பிடி வலைகளே காரணம்
மீன் பிடி வலைகள்தான் ஆமைகள் இறப்புக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் கடல் சுற்றுச்சூழலியல் நிபுணர்கள். வழக்கமாக ஆமைகள், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அதிக அளவில் வருகின்றன. இந்த காலகட்டத்தில் பெண் ஆமைகள் குஞ்சு பொறித்து முட்டையிடும். ஒரே நேரத்தில் 60 முதல் 120 முட்டைகள் வரை அவை பொறிக்கும். ஒரு பெண் ஆமையானது ஒரு சீசனில் 2 அல்லது 3 முறை முட்டையிடுமாம். முட்டையிடுவதற்காக அவை கடற்கரைக்கு வரும்போது மீன்பிடி வலைகளில் சிக்கி இறக்கின்றனவாம்.
ஜனவரி மாதம் முழுவதும் இறப்புகள்தான்
ஜனவரி மாதத்தில் தினசரி சில ஆமைகள் இறந்து போய் கரை ஒதுங்கிக் கொண்டிருந்தனவாம்.
பிப்ரவரியில் திருவொற்றியூரில்
பிப்ரவரி 1ம் தேதி கூட திருவொற்றியூர், துணை சார்பதிவாளர் அலுவலகம் அருகே ஒரு பெரிய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.