என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: தீயாய் விற்கும் விண்ணப்பங்கள்
சென்னை: என்ஜீனியரிங் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள் இந்த ஆண்டு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. விற்பனை தொடங்கிய இரண்டே நாளில் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.
பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 3-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலை கழகம் உள்ளிட்ட 60 மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில் 67 ஆயிரத்து 935 படிவங்கள் விற்பனையானது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும்.
திங்கட்கிழமை 2-வது நாள் 47 ஆயிரத்து 517 விண்ணப்படிவங்கள் விற்பனையானது. 2 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 442 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
எஞ்ஜீனியரிங் படிப்பு விண்ணப்பங்கள் வாங்க தமிழகம் முழுவதும் மாணவ- மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 9-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளி வருகிறது. அதன் பிறகு என்ஜீனியரிங் விண்ணப்பம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 20-ந் தேதி வரை படிவங்கள் விற்கப்படுகின்றன.
வழக்கம் போல இந்த ஆண்டும் எஞ்ஜீனியரிங் படிப்புகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் உள்ளது. தற்போது 2.5லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவுக்கு பிறகு தேவையை பொறுத்து படிவங்கள் அச்சடிக்கப்படும். மாணவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இசிஇ, இஇஇ படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.