விரைவில் 1,600 முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்: பள்ளிக் கல்வி இயக்குனர்
நாகர்கோவில்: விரைவில் 1,600 முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுககு பாராட்டு விழா நடந்தது.
நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு உள்ளது. பள்ளியில் கணிதப் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் கூட அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்பெண்கள் எடுக்க திணறும் சூழ்நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளை மாற்ற வேண்டும். எம்பிபிஎஸ், பிஇ மட்டும் தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழகம் கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 1000க்கும் மேற்பட்ட தொடக்க நிலை பள்ளிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 1,600 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் 10 அல்லது 12 நாட்களில் வெளியாகும் என்றார்.