மேட்டூர் அணையிலிருந்து 2.05 லட்சம் கன அடி நீர் திறப்பு.. காவிரிக் கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு!
Recommended Video
சேலம்: கடல் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணையிலிருந்து மிகப் பெரிய அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 12 மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து கேஆர்எஸ் அணை, கபினி அணை ஆகியவற்றிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மிகவும் அபரிமிதமான அளவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
1.90 லட்சம் கனஅடி நீர் அதிகரிப்பு
இன்று மாலை வரை மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு நீர் வரத்து 1.78 லட்சம் கனஅடியாக உயர்ந்திருந்தது.
வீராணம் நீர் மட்டம் உயர்ந்தது
கிழக்கு மேற்கு கால்வாய் பகுதிகளிலிருந்து பாசனத்துக்கு 800 கனஅடி நீர் திறப்பு ஏற்பட்டுள்ளது. வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.35 அடியை எட்டியது. இதன் முழு கொள்ளளவு 47.05 அடி கொண்டதாகும்.
கொள்ளிடம் ஆறு
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து 200 கனஅடியாகவும் நீர் வெளியேற்றப்படுவது 2000 கனஅடியாகவும் உள்ளது. வீராணத்திலிருந்து சென்னை குடிநீருக்கு 74 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு 67,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றிலிருந்து 1.67 லட்சம் நீரும் திறக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில்...
முக்கொம்பு அணையிலிருந்து வாய்கால்களுக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பிலிகுண்டுலு அணைக்கு 1.90 லட்சம் கனஅடியாக இருந்த நீர் வரத்து 1.92 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல்லி பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 40ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர்
இந்த நிலையில் இன்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.85 லட்சம் கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து திறக்கப்படும் நீரும் அதிகரிக்கப்பட்டது. அதன்படி 7 மணியிலிருந்து விநாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.
4வது முறையாக 2 லட்சம்
மேட்டூர் அணையில் இதுவரை 3 முறை மட்டுமே விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. 1961, 1993, 2005 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறை இதுபோல விநாடிக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 4வது முறையாக விநாடிக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தீவிர கண்காணிப்பு
பெருமளவிலான நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரிக் கரையோரம் உள்ள 12 மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வருவாய், தீயணைப்பு, போலீஸ் ஆகிய துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.