தங்க நகைகள் மீது 1% கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் நகைக் கடைகள் 3 நாட்கள் மூடல்!
சென்னை: மத்திய பொது பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது விதிக்கப்பட்ட 1% கலால் வரியை ரத்து செய்ய கோரி நாடு தழுவிய அளவில் நகைக் கடைகளை 3 நாட்கள் மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிராண்டுகளின் பெயரில் விற்கப்படும் தங்க நகைகள் மீது கலால் வரி ஒரு சதவீதம் விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கிராமுக்குரூ.27 வீதம் சவரனுக்கு 216 ரூபாய் விலை உயரும்.
ஏற்கனவே தங்கத்தின் விலை சவரன் ரூ.20 ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையில் இந்த புதிய வரி மூலம் நகை விலை கடுமையாக உயரும். ஏற்கனவே தங்க நகைகள் மீது கலால் வரி இருந்ததை ஐ.மு கூட்டணி அரசு அறவே நீக்கியது. இப்போது நகைகள் மீது கலால் வரி ஒரு சதவீதம் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது விதிக்கப்பட்ட 1% கலால் வரியை ரத்து செய்ய கோரி நகைக் கடைகளை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அகில இந்திய அளவில் நடைபெறும் கடை அடைப்பில் தமிழகமும் பங்கேற்க உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 35000 கடைகளும் நாளை முதல் 3 நாட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகைக் கடைகளில் பணிபுரியும் 10 லட்சம் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் அறிவித்துள்ளார்.