உடுமலை ஜாதி ஆணவக் கொலை: ஒருவர் கைது; 3 பேரிடம் போலீஸ் விசாரணை
சென்னை: ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் நடுரோட்டில் வெட்டி கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கர் கொலை தொடர்பாக, பழனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக லிஸ்ட்டில் சிக்கிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர், 22. நான்காம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவரான இவர், 8 மாதங்களுக்கு முன் கவுசல்யா 19, என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்துள்ளது. அவ்வப்போது பேச்சுவார்த்தை மூலம் பெண்ணை திரும்ப அழைத்துச் செல்ல பெண்வீட்டார் முயற்சி செய்தனர். இதற்கு கவுசல்யா மறுத்துவிட்டாராம்.
சங்கர் கவுசல்யா
ஞாயிறன்று பிற்பகல் 12.30 மணியளவில் உடுமலைப் பேட்டையில் உள்ள ஒரு கடைக்கு புது துணி எடுக்க சங்கரும் கவுசல்யாவும் கடைக்குச் சென்றனர். கடையில் இருந்து திரும்பும்போது, சாலையை கடக்க நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தனர்.
வெட்டிக்கொலை
இவர்களை பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இருவரையும் சரமாரியாக வெட்டினர். அதில், சங்கர் உயிரிழந்தார். இந்த காட்சி அந்த கடையின் முன்பு இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் வெளியான இந்த காட்சி அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
கடையடைப்பு, மறியல்
இந்த சம்பவத்தைக் கண்டித்து சங்கரின் ஊரான குமரலிங்கத்தில் நேற்று அவரது உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
உறவினர்கள் கொதிப்பு
உடுமலை கோட்டாட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலையாளிகள், பின்னணியில் இருப்பவர்கள் மீது வன் கொடுமை வழக்கின்கீழ் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தனிப்படை தேடுதல் வேட்டை
அப்போது அவர்களிடம் சமாதானம் பேசிய திருப்பூர் மாவட்ட எஸ்.பி, ‘கொலை குறித்து பலரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது. கொலை சம்பவத்தில் 5 பேர் நேரடியாக ஈடுபட்டுள் ளது வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. மேலும் பலருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என கருதப்படுகிறது. 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பழனி, திண்டுக்கல், பாப்பம்பட்டி உட்பட பல இடங்களிலும் தேடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை கள் நிறைவேற்றப்படும். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தார்.
உடல் அடக்கம்
இதனை ஏற்பதாக அறிவித்த போராட்டக்காரர்கள், அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்யாவிட் டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்றனர். பின்னர், போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். நள்ளிரவில் சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மனைவி அடையாளம்
பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய 5 பேர் வெட்டியதாகத் தெரிவித்துள்ளாராம். இதன் அடிப்படையில் உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் சந்தேக லிஸ்ட்டில் சிக்கிய மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
பழனியில் கைது
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த ஜாதி ஆணவக்கொலைக்கான திட்டத்தை வகுத்தது கவுசல்யாவின் உறவினர் பாண்டித்துரை என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் கொலையாளிகளை தேடிய போலீசார் பழனி அருகே பட்டிவீரன்பட்டியில் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
21ம் தேதிவரை நீதிமன்ற காவல்
இந்த நிலையில் சங்கர் படுகொலை தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ரஜனாபர்வீன் முன்னிலையில் நேற்று சரணடைந்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை மார்ச் 21ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சின்னச்சாமியை போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.