தை அமாவாசை: ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்பணம்
ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் உள்ளிட்ட கடல்களில் புனித நீராடிய மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அமாவாசை நாட்களில் தாய், தந்தையரை இழந்தவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையர்களை நினைத்து விரதம் இருந்து, படையல் செய்து வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் கடல் மற்றும் ஆறுகள் அமைந்த திருக்கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
தை மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் ஒரு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.
ரமேஸ்வரத்தில் வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
அமாவாசையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் ராமேஸ்வரம் வந்தடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை 3 மணி முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் தர்ப்பணம் செய்து தானம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர்.
தீர்த்தங்களில் நீராடல்
ராமநாதசுவாமி கோயிலுக்குள் அமைந்துள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தீர்த்தமாடவும், சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் அதிகாலையிலேயே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வந்து குவிந்தனர். காவிரியில் புனித நீராடிய மக்கள் அம்மா மண்டபத்தில் தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றினர்.
திருவையாறில் இன்று அதிகாலை 5.30 மணிக்கே புஷ்பமண்டப படித்துறைக்கு மக்கள் வரத்தொடங்கினர். படித்துறையில் தர்ப்பண சடங்குகளை செய்தனர்
கன்னியாகுமரியில்
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் குவிந்த மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளம், நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலிலும் மக்கள் நீராடி கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கும் சடங்குகளை செய்தனர்.
பவானி கூடுதுறை
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், அம்மாபேட்டை சொக்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் ஏராமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ஆறுகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பின்னர் சாமி தரிசனம் செய்தனர். புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.