ரெஸ்யூமில் பொய் சொல்லி இருக்கிறார்களா.. ஜெயில்ல வேலை கொடுப்பாங்க.. அதிர்ச்சி ரிப்போர்ட்
வேலை தேடும் நபர்களில் ஆறில் ஒருவர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
டெல்லி: வேலை தேடும் நபர்களில் ஆறில் ஒருவர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சாதாரண தகவல்களை கூட மறைத்து சிலர் பொய் சொல்வதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற தவறான தகவல்கள் அளிக்கும் நபர்களுக்கு சிறை தண்டையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி கடுமையான பல தண்டனைகள் இந்த குற்றத்திற்கு வழங்கப்படலாம்.
இது போன்ற பொய்யான தகவல்களை அளித்து பலர் இதற்கு முன்பே வேலைக்கு சேர்ந்து இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு
இந்தியாவில் வேலை தேடும் நபர்களில் பலர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆறில் ஒருவர் தங்கள் ரெஸ்யூமில் பொய் சொல்லி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 10,000 க்கும் அதிகமானோர் இதன் மூலம் வேலை பெறுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
சம்பளம் வாங்குவதில் பொய்
இதில் அதிகபட்சமாக பலர் பழைய சம்பளம் குறித்த தகவல்களில் பொய் சொல்லி இருக்கின்றனர். மேலும் கல்வி சார்ந்த தகவல்களில் பலர் பொய் சொல்லி உள்ளனர். 4 சதவிகிதம் பேர் பொய்யான கல்வி தகுதியையும் 6 சதவிகிதம் பேர் பொய்யான விலாசத்தையும் அளித்துள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 1 லட்சத்தில் 5 ஆயிரம் பேர் பொய்யான பேன் கார்ட், ஆதார் கார்ட், ரேஷன் விபரங்களை அளித்துள்ளனர்.
நிறுவனம்
இந்த நிலையில் எந்த மாதிரியான நிறுவனங்களில் இது போன்ற பொய்யான தகவல்கள் அளிக்கப்படுகிறது என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக பைனான்ஸ் நிறுவனங்களில் 23.99 சதவிகிதமும், டெலிகாம் நிறுவங்களின் 23.44 சதவிகிதம் பேரும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஐடி நிறுவனங்களில் 8.25 சதவிகிதம் பேர் இது போல பொய் சொல்லி உள்ளனர்.
தண்டனை என்ன
இந்த நிலையில் இது போன்ற தவறுகளுக்கு என்ன தண்டனை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இந்திய குற்றவியல் தடை சட்டத்தின் படி 5 வருடம் வரை தண்டனை அளிக்கப்படலாம். மேலும் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். முக்கியமாக அதன்பின் எங்கும் வேலை தேட முடியாதபடி குற்றம் செய்த நபரின் தகவல்கள் 'பிளாக்' செய்யப்படும். மேலும் தற்போது பொய்யான தகவல்கள் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு இதே தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.