நெல்லை: ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை
திருநெல்வேலி: நாங்குநேரி அருகே வகுப்பறையில் ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த ப்ளஸ் 1 மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெயர் அனுஷா. இவர் வள்ளியூரில் உள்ள பாத்திமா மகளிர் பள்ளியில் +1 படித்து வந்துள்ளார். மாணவியின் தந்தை தனபாலன், ரயில்வே கேண்டீனில் வேலை செய்கிறார். வள்ளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தனபாலனின் மூத்த மகளான அனுஷாவிற்கு உடல்நிலை சரில்லாமல் போய்விடுவது உண்டு. கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்ட அனுஷா 10 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. உடல்நிலை சரியான பிறகு பள்ளிக்கு சென்ற அனுஷா ஒரு நாள் திடீர் என்று மயக்கமடைந்து உள்ளாள். அப்போது தமிழ் ஆசிரியை தமிழ் செல்வி இவ நல்லா நடிக்கிறா, கருகருன்னு குண்டா பாக்கவே சகிக்கல என்று அனைத்து மாணவிகள் முன்பாக திட்டியுள்ளார். இதே போல் வகுப்பறையிலும் அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது .
இதில் மனமுடைந்த அனுஷா வீட்டுக்கு வந்ததும் இனி நான் பள்ளிக்கு போக மாட்டேன் அந்த தமிழ்செல்வி மிஸ் அசிங்க அசிங்கமா திட்டுறாங்க என்று அம்மாவிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து அனுஷா பள்ளிக்கு செல்லவில்லை .
இதனால் அனுஷாவின் தாயார் வசந்தியும் அவரது தாத்தாவும் நேற்று (10.2.15) மதியம் 2.30 மணிக்கு பள்ளிக்கு சென்று அனுஷா விசயமாக பேச சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து வீட்டில் தனியாக இருந்த அனுஷா தனது தயாரின் சேலையை எடுத்து மின்விசிறியில் மாட்டி தற்கொலை செய்துக் கொண்டாள்.
பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் அனுஷா தூக்கில் தொங்குவதை பார்த்த தாயார் வசந்தி அலறினார் இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் வேகமாக ஓடிவந்தனர். உடனடியாக சேலையை துண்டித்து அனுஷாவை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனாலும் அவரது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வள்ளியூர் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அனுஷாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தற்கொலை குறித்து அனுஷாவின் தாத்தா காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரில் தனது பேத்தி சாவுக்கு காரணம் பாத்திமா பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை தமிழ் செல்வி தான் காரணம் ஆகவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் ஆசிரியை மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.