விருதுநகர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பெயரில் ஒரு 10,000!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு பிப்ரவரி 9ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வருகிறார். அங்கு தேவர் சிலைக்கு அவர் தங்கக் கவசத்தை அணிவிக்கிறார்.
இதையொட்டி வருகை தரும் ஜெயலலிதாவை வரவேற்க மாவட்ட வாரியாக அதிமுகவினர் தொண்டர்களைத் திரட்டி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து 10,000 பேருடன் வரவுள்ளதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பசும்பொன் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கடந்த 2010-ம் ஆண்டு பசும்பொன் கிராமத்துக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களும், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வரி சுவாமிகளும் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து தற்போது பசும்பொன்னில் உள்ள தேவரின் உருவச்சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வருகிற 9-ந்தேதி அவர் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் 10 ஆயிரம் அ.தி.மு.க.வினர் பசும்பொன் செல்கின்றனர்.
அங்கு முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கும் நிகழ்ச்சியிலும், தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றிய கழகம், 7 நகர கழகம் மற்றும் 9 பேரூர் கழக நிர்வாகிகள் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்கள் அத்தனையும் ஜெயலலிதாவை வரவேற்க திரண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே அமைச்சர் செல்லூர் ராஜு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் மாவட்ட வாரியாக எத்தனை பேரைத் திரட்டி வரப் போகிறோம் என்பதை மா.செக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.