"பார்கள்" மூடப்பட்ட கேரளாவுக்கு கடத்தப்பட்ட 10,000 லிட்டர் எரிசாராயம் சிக்கியது....!
செங்கோட்டை: மதுக் கடைகள் கேரளாவில் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்திற்கு லாரியில் கடத்தப்பட்ட 10,000 லிட்டர் எரி சாராயம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சரக்கு ஏற்றி செல்கின்றன.
தற்போது அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவர அரசு தீர்மானித்து முதல் கட்டமாக மதுக் கடைகளையும், தனியார் பார்களையும் படிப்படியாக அடைத்து வருகிறது.
தவிப்பில் குடிகாரர்கள்
இதனால் கேரள "குடிமக்கள்" கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், கேரள மாநிலத்தின் முக்கியப் பண்டிகையான ஓணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. இந்நிலையில் நேற்று பாரதிய ஜனதாக் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் முழுஅடைப்பு நடைபெற்றது.
லாரியில் கடத்தல்
இதையொட்டி தமிழக கேரளா எல்லையில் ஆயிரக்கணக்காண வாகனங்கள இருமாநில எல்லைகளிலும் நிறுத்தப்பட்டன. இதனை சாதகமாக்கிக் கொண்ட கடத்தல் கும்பல்கள் தமிழக கேரளா எல்லையான புளியரை வழியாக நேற்று நள்ளிரவில் ஒருலாரியில் 10ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கேரளா நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
சிக்கிய லாரி
புளியரை, ஆரியன்காவு சோதனை சாவடிகளை தாண்டி சென்றபோது அம்மாநில சிறப்பு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையினரின் சோதனையில் எரிசாராயம் கொண்டுசென்ற லாரி சிக்கியது. லாரியையும், அடூரை சார்ந்த ஓட்டுனர், பத்தினம் திட்டாவை சார்ந்த கிளினரையும் கைது செய்து புனலூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
ஓணத்திற்காக கடத்தல்
அவர்களிடம் நடத்திய முதல் விசாரணையில் கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஓணம் பண்டிகைக்காக எரிசாராயம் கடத்தி வரப்பட்டதாகவும், இதேபோல இன்னும் நிறைய லாரிகளில் சரக்குகள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிர சோதனை
இதையடுத்து ஆரியன்காவு சோதனை சாவடியில் கேரளா மாநில மதுவிலக்கு போலீசார் தீவீர வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். 10ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சந்தை மதிப்பு ரூ 20 லட்சம் ரூபாய் ஆகும்.
ஒரு லிட்டரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்தால்
ஒரு லிட்டர் எரி சாராயத்தில் பத்து லிட்டர் தண்ணீர் கலந்தால் போதும் அது போதை பானமாகி விடும். தற்போது கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டு வருவதால் எரி சாராயத்திற்கு அங்கு வழக்கத்தை விட அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.