வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்காக விரைவில் 10,000 வீடுகள்... ஒ.பி.எஸ் அறிவிப்பு
சென்னை: வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்காக விரைவில் 10,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று மாநில நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கி சார்பில் தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கினார். இந்த விழாவில் மாநில நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்..
நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அடையாறு கூவம் ஆற்றங்கரையில் வீடுகளை இழந்த 10 ஆயிரம் பேருக்கு புதிய வீடுகள் கட்டி தரப்படும். முதல்வரின் உத்தரவு படி அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.
சிறு தொழில்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரிய ஏற்பாடு செய்து வருகிறார். பயிர்க்கடன், விவசாயிகள் கடன், வீட்டுக்கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீட்டு உபயோக பொருட்களை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் சலுகை கடன் வழங்கப்படும். மழை, வெள்ளத்தின் போது மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியோடு பலர் காப்பாற்றப்பட்டனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மனித உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கிய 19.63 லட்சம் பேர் மீட்கப்பட்டு 7500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். .பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் 15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழககத்தில் வெள்ள சேத மதிப்பீட்டை ஆய்வு செய்ததில் ரூ.8401 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. சேத விவரங்கள் மீண்டும் கண்கிடப்படுகிறது. கூடுதல் அறிக்கை மத்திய அரசிடம் கொடுக்கப்படும் என்று கூறினார்.