கேஸ் சிலிண்டர் கீழ் பதுங்கி 'உஸ்' என்று சத்தம் கொடுத்த 10 அடி நீள பாம்பு… இலாவகமாக பிடித்த இளைஞர்
கேஸ் சிலிண்டர் கீழ் பதுங்கி இருந்த 10 அடி நீள ராஜ நாகத்தை இலாவகமாக இளைஞர் ஒருவர் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை: தமிழக-கேரளா எல்லையான கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியை அடுத்துள்ள எடப்பாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாகும்.
இந்தப் பகுதிகளில் தற்போது மழையில்லாததால் வன உயிரினங்கள் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன.
இந்நிலையில் இதே பகுதியில் வசித்து வருபவர் ஜெஸி. இவர் கணவனை இழந்து தனியாக வசித்து வருகிறார். அதிகாலை இவரது வீட்டு அடுப்படியின் கீழ் வித்தியாசமான சப்தம் வரவே குனிந்து பார்த்திருக்கிறார்.
சிலிண்டர் கீழ் பாம்பு
அப்போது, எரிவாயு சிலிண்டர் அருகே கடுமையான விஷத்தன்மை கொண்ட ராஜ நாகம் ஒன்று சுருண்டு கிடந்துள்ளது. இதைக் கண்ட அவர் அலறியடித்து வீட்டுக்கு வெளியே ஓடி வந்து அருகிலுள்ளவர்களிடம் சொல்லி இருக்கிறார். அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறைக்கு தகவல்
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கேரள மாநிலத்தில் பிரபலமான பாம்பு பிடிக்கும் நபரான திருவனந்தபுரத்தை சேர்ந்த வாவா சுரேஷ் என்பவருக்கு தகவல் அளித்தனர். பாம்பு பிடிப்பதில் வல்லவரான சுரேஷ் பாம்பிருக்கும் வீட்டிற்கு வந்தார்.
10 அடி நீள ராஜநாகம்
சிலிண்டர் கீழ் பதுங்கி இருந்த சுமார் 2 வயதுள்ள 10 அடி நீள ராஜநாகத்தை இலாவகமாக பிடித்தார் சுரேஷ். இதனை காண அங்கு நூற்றுக் கணக்கானோர் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். அவர் அச்சமின்றி பெரிய ராஜ நாகத்தை பிடித்ததைப் பார்த்து அங்கிருந்தோர் ஆச்சர்யப்பட்டனர்.
காட்டுக்குள்..
ராஜநாகத்தை பிடித்த வாவா சுரேஷ் அதனை தென்மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார். மேலும் இவர் தென்மலை பகுதியில் ரியா என்பவரது வீட்டுக்குள் புகுந்த 6 வயதுள்ள 15அடி நீளம் கொண்ட மற்றொரு ராஜ நாகத்தையும் பிடித்து தென்மலை வனத்தில் விட்டு சென்றார்.