நடிகை ராதா தோட்டத்தில் காட்டுப் பன்றிகளுக்கு வைத்த விஷம்.. தெரியாமல் தின்ற 10 ஆடுகள் பரிதாப பலி
நடிகை ராதா நிலத்தில் காட்டுப் பன்றிகளுக்கு வைத்த விஷத்தை தின்று 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகியுள்ளன.
திருநெல்வேலி: காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட விஷயத்தை தின்ற ஆடுகள் 10க்கும் மேல் பலியாகியுள்ளன. நடிகை ராதா நிலத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது ஆடுகளும் மேலும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் ஆடுகளும் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம்.
அந்தப் பகுதியில் தமிழ் திரைப்பட நடிகை ராதாவுக்கு சொந்தமாக 30 ஏக்கர் தோட்டம் உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் அந்த தோட்டத்திற்குள்ளும் சென்று மேய்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
விஷம் கலந்த பழங்கள்
இந்த நிலையில் தோட்டத்தில் கால்நடைகள் மேய்வதை தடுக்க நடிகை ராதாவின் தோட்டத்து காவலாளியான கேரளாவை சேர்ந்த ரவி மற்றும் தளவாய் புரத்தை சேர்ந்த சாலமன் ஆகியோர் பழங்களில் விஷத்தை கலந்து ஆங்காங்கே போட்டுள்ளனர்.
ஆடுகள் பலி
நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ராமலிங்கத்தின் ஆடுகள் நடிகை ராதாவின் தோட்டத்துக்குள் சென்று, விஷம் வைக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டன. இதனை உண்ட ஆடுகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதில் 10 ஆடுகள் செத்து மடிந்தன.
போலீசில் புகார்
ஆடுகளை காணாமல் தேடிய ராமலிங்கம், நடிகை ராதாவின் தோட்டத்துக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு தனது 10 ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இறந்து கிடந்த ஆடுகளை கால்நடை டாக்டரை வைத்து பரிசோதித்தனர். அப்போது உணவில் விஷம் வைத்து ஆடுகள் கொல்லப்பட்டது தெரியவந்தது.
ஒருவர் கைது
இதைத்தொடர்ந்து நடிகை ராதாவின் தோட்ட காவலாளிகள் ரவி, சாலமன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கேரளாவை சேர்ந்த காவலாளி ரவியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் காட்டுப் பன்றிகளை அழிக்க வைத்த விஷப்பழத்தை ஆடுகள் தின்று பலியானதாக கூறியுள்ளார். மற்றொரு காவலாளியான சாலமனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாவின் சொத்துக்கள்
நெல்லை மாவட்டத்தில் நடிகை ராதா மற்றும் அவரது சகோதரி அம்பிகாவுக்கு பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றை இவரது தாயார் சரசம்மாள் பராமரிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.