10% எக்ஸ்ட்ரா மழை பெய்திருக்கிறதாம்.. இந்தாண்டு தென் மேற்கு பருவமழை சீசனில்!
சென்னை: இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இதுவரை சராசரியை விட 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும். ஆனால், தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை மூலமாகவே எப்போதும் அதிகப்படியான மழை கிடைக்கும்.
ஆண்டுதோறும் தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்குப் பருவமழை காலம் ஆகும். இந்த காலத்தில் சராசரியாக 32 செமீ மழை பெய்வது வாடிக்கை.
கூடுதல் மழை...
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை முடிவடைய இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், தற்போதே வழக்கத்தை விட கூடுதலாக 10 சதவீதம் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2010ல் 20% அதிகம்...
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் முழுவதும் 376.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரி மழையை விட 20 சதவீதம் அதிகம்.
2012ல் குறைவு...
2011-ம் ஆண்டு 298.9 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அது சராசரியை விட 6 சதவீதம் குறைவு. 2012-ம் ஆண்டு 243.5 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது சராசரியை விட 23 சதவீதம் குறைந்தது.
கூடிக் குறைந்தது...
2014-ம் ஆண்டு 321.5 மில்லி மீட்டர் மழை பெய்து சராசரியை விட 1 சதவீதம் அதிகரித்தது. 2015-ம் ஆண்டு 285.8 மில்லி மீட்டர் மழை பெய்து, சராசரியை விட 10 சதவீதம் குறைந்துள்ளது.
10 % அதிகம்...
2016-ம் ஆண்டு இதுவரை 152 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 10 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதாவது இதுவரை சராசரியாக 137 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும்.
50 நாட்கள் உள்ளது...
கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய தமிழ்நாட்டில் சராசரி மழையாக 320 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். அதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ளன.
மழைக்கு வாய்ப்பு...
வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இந்த வானிலை 5 நாட்களுக்கு நிலவும். அதாவது இதே வானிலைதான் நீடிக்கும்" என அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழையால் வெள்ளம்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ மழை கிடைக்கும். ஆனால் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 68 செ.மீ மழை பெய்தது. இதுசராசரி அளவைவிட 53 சதவீதம் கூடுதலாகும். இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.